முத்துசாமி
பெருஞ் செல்வரல்ல என்றாலும் கணிசமானோர் வறுமைக் கோட்டிலும் அதை ஒட்டியும் வதைபடும்
இந் நாட்டில் அவரது சொத்தும் வருமானமும் தேவைக்கு மிஞ்சியவையே.
அவருக்கு ஒரே
மகன் கண்ணுசாமி. பட்டதாரி. வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்நிலை எழுத்தர். தந்தையைப்
போலவே உழைக்கும் மக்களின் நிறம்.
மகனுக்குப் பெண்
பார்க்கத் திட்டமிட்டார் முத்துசாமி. மருமகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை
நிர்ணயித்துக் கொண்டார்: சிவப்பு நிறம், பத்தாவதற்குக் குறையாத படிப்பு, அழகு, நல்ல குணம், எல்லாவற்றுக்கும்
மேலாகப் பெருஞ் செல்வக் குடும்பத்து ஒரே பெண். மற்றவை குறைந்தாலும் பாதகம்
இல்லை. இத் தகுதிதான் மிக முக்கியம். அப்போதுதானே நிறைய வரதட்சிணை, சீர், சொத்து முதலியன
கிடைக்கும்?
சட்ட விரோதமாயிற்றே
வரதட்சணை வாங்குவது? ஆமாம், சட்ட விரோதந்தான். அது மட்டுந்தான் சட்ட
விரோதமா? கொடுப்பதுந்தான்.
வாங்குவதும் குற்றம், தருவதும் குற்றம் என்று சட்டம் கூறும்போது
அளிப்பவனும் வெளியே சொல்லமாட்டான், பெறுபவனும் சொல்லமாட்டான். இரு சாராரும்
சட்டத்தை மீறி நடக்கட்டும். வரதட்சணை நீடூழி வாழட்டும் என்னும் நோக்கத்தில்
நிறைவேறியது தான் அந்த சட்டமே யொழிய அதை ஒழிப்பதற்காக அல்ல என்பது முத்துசாமிக்கு
நன்றாகவே தெரியும்.
சோதிடர்
உறுதியாய் சொல்லியிருந்தார்:
“முத்துசாமி, நீங்கள் விரும்புகிறபடி மருமகள் கிடைப்பதற்கு ஆனி 18 கடைசி நாள். அதற்குள் மணவுறுதியாவது
செய்துவிடவேண்டும்” என்று.
நாலரை மாத
அவகாசமே இருந்தமையால் முத்துசாமி மிகத் தீவிரமாய் செயல்பட்டார். திருமண
அமைப்பாளர்கள் மூலமும் தமிழ், ஆங்கில ஏடுகளில் விளம்பரம் வெளியிட்டும்
பரபரப்பாய் முயன்றார்.
கெடு
நெருங்கிக்கொண்டிருந்தது; ஆனால் பெண் அமைந்தபாடாய் இல்லை. ஓரம்சம்
பிடித்திருந்தால் ஈரம்சம் சரியில்லை. எல்லாம் ஒத்திருந்தாலோ, பெண்
வீட்டார்க்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை!
விடாமல்
பாடுபட்டும் தோற்றுப்போன முத்துசாமி ஒரு வழியாய்ப் பெண்ணொருத்தியை உறுதி செய்து
திருமணத்தை நடத்த செய்தார். உறவினர், நண்பர்க் கெல்லாம் ஒரே வியப்பு! பெண் ஏழையாம்!
முத்துசாமி ஏன் தம் குறிக்கோளைக் கைவிட்டார்?
இதோ அவரே தம்
நண்பரிடம் விளக்குகிறார்:
"எத்தனையோ பெண் பார்த்தேன். அலைந்தலைந்து
அலுத்துப் போனேன். சோதிடர் வைத்த கெடுவும் முடிந்துவிட்டது. அவரிடம் முறையிட்டேன்.
அவர், குரு
பெயர்ந்துவிட்டதால் கண்ணையன் சாதகப்படி பணக்கார மனைவி கிடைக்க இனிமேல் வாய்ப்பு
இல்லை. கூடுவாஞ்சேரியில் தான் உங்கள் மருமகள் இருக்கிறாள். செக்கடித் தெருவில்
மேற்குப் பார்த்த ஓட்டு வீடு; பக்கத்தில் மின் கம்பம்; எதிரே இரட்டை
வேப்பமரம். இந்த அடையாளங் கொண்ட வீட்டுப் பெண்தான் முடியும். நீங்கள் எதையும்
யோசிக்காமல் ஏழை என்று தயங்காமல் அந்தப் பெண்ணை முடியுங்கள்” என்று சொன்னார்.
அவர் வாக்கு அப்படியே பலித்துவிட்டது. சும்மா சொல்லக்கூடாது. அவர் மிகக்
கெட்டிக்காரர்”
இதை சாடையாய்க்
கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தி உள்ளூரச் சிரித்துக்கொண்டார். தம் மகளுக்கு நல்ல
வரன் கிட்டாமல் கவன்றுகொண்டிருந்த அவர் கண்ணயன்மீது குறி வைத்தார். முத்துசாமியின்
நிபந்தனைகளை அறிந்தார். அவரது சோதிடருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து
சரிக்கட்டித் தம் பெண்ணுக்கு மணம் முடித்தார்.
முத்துசாமி
சொன்னதைக் கேட்டபோது அவருக்கு சிரிப்பு வராதா?
தலைப்பும் கதையும் அருமை
ReplyDeleteஏமாளிகள் முட்டாளாகவும்
ஏமாற்றுபவர்கள் புத்திசாலிகளாகவும்
இருக்கிற இக்காலத்தில் இவையெல்லாம் சகஜம்தானே !
மனம் கவர்ந்த பதிவு
உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி .
DeleteTha.ma 1
ReplyDelete