Tuesday 21 August 2012

நாடகத் தமிழ்




இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனத் தமிழை மூவகைப்படுத்துகிறோம் எது இயற்றமிழ், எது இசைத் தமிழ் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நாடகத் தமிழ் பற்றிச் சரியான விவரம் அறியாதார் பலர். நாடகங்களில் இடம் பெறும் உரையாடல்தான் நாடகத் தமிழ் என்று நினைப்பது தவறு.


ஆங்கிலேயரின் தொடர்பு ஏற்பட்ட பின்பு அவர்களது ட்ராமாவை நாடகம் என்றோம்; அதை முன்மாதிரியாய்க் கொண்டு அங்கம், காட்சி என்று பிரித்துப் பாட்டும் உரைநடையுமாய் நாடகங்கள் இயற்றினோம். ஆனால் பழங் காலத்தில் நாடகம் என்பது நாட்டியத்தைக் குறித்தது. இரு சங்க நூல்களுள் நாடகம் என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது:


1 - பட்டினப்பாலை அடி 113


பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் ( இதில் பாடலும் ஆடலும் கூறப்படுகின்றன)


2 - பெரும்பாணாற்றுப்படை 55 ஆம் அடி:


நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்து ( நாட்டியப் பெண்டிர் ஆடும் களத்தைச் சொல்கிறது)


பிற்கால நூல்களிலும் நாடகம் என்ற வார்த்தை நடனம் என்கிற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது:



1 - சிலப்பதிகாரம் ( 22 - 142 ) :


நாடக மகளிர் ஆடரங்கு (நடன மாதர் ஆடுகின்ற மேடை)


2 - கம்பர் ( 1494 ) :


நாடக மயில் (ஆடும் மயில்). 

ஆகவே நாடகத் தமிழ் என்பது நாட்டியம் ஆடும்போது பாடுகிற பாட்டு. அந்தப் பாட்டுகளை எப்படிப் புனையவேண்டும், நடனம் எவ்வாறு ஆடவேண்டும் என வழி காட்டும் நாட்டிய இலக்கண நூல்களும் நாடகத் தமிழைச் சேர்ந்தவைதான். கூத்த நூல், சந்தம், சயந்தம், பரதம் முதலிய நாடகத் தமிழ் நூல்கள் அழிந்துவிட்டன. இப்போது ஒன்றுகூட எஞ்சியில்லை.

1 comment:

  1. மிக்க நன்றி ஐயா... இப்போது ஒன்று கூட இல்லை என்பது தான் மிகவும் வருத்தப்படும் விசயம் (த.ம. 1)

    ReplyDelete