கைதியிடம், "இரு" எனச் சொல்லிவிட்டு தருய் அறைக்குப் போனார். வாயிலைக் கடந்தபோது எண்ணம் மாறி ரிவால்வரை எடுத்துத் தம் பையில் திணித்தார்; பின்பு திரும்பிப் பாராமல் அறைக்குள் நுழைந்தார்.

சோபாவில் நெடு நேரம் படுத்துக்கொண்டு வானம் கொஞ்சஞ் கொஞ்சமாய் மூடுவதையும் அமைதி நிலவுவதையும் கவனித்தார்.

அவர் எழுந்தபோது வகுப்பறையிலிருந்து எந்த ஒலியும் வரவில்லை. அராபியர் ஓடியிருப்பார், எந்த முடிவும் செய்யத் தேவை இன்றி மீண்டும் தனிமையும் தாமுமாய் இருக்கப் போகிறோம் என்ற அந்த ஒரே எண்ணம் விளைவித்த மகிழ்ச்சி அவருக்கே வியப்பளித்தது. ஆனால் கைதி அங்கே இருந்தார். "வா" என்றார் தருய். அராபியர் பின்தொடர்ந்தார்.அறையில் ஒரு நாற்காலியை ஆசிரியர் அவருக்குக் காட்டினார் . அராபியர் அமர்ந்தார்.

- பசிக்கிறதா?

- ஆமாம்.

தருய் கேக் செய்து ஆம்லெட்டும் தயாரித்தார். பையில் இருந்த ரிவால்வரில் கை இடித்தது. வகுப்பறை போய் மேசையின் இழுப்பறையில் வைத்துவிட்டு வந்தார்.

இரவு கவிந்தது. விளக்கு ஏறிவிட்டுப் பரிமாறினார்.

- சாப்பிடு .

- நீ?

- உனக்குப் பின்பு சாப்பிடுவேன்.

உண்டதற்கு அப்புறம் கேட்டார்:

- நீயா நீதிபதி?

- இல்லை; நாளைவரை உன்னைக் காக்கிறேன். ஏன் அவனைக் கொன்றாய்?

- அவன் ஓடினான்; நானும் பின்னால் ஓடினேன். இப்போது என்னை என்ன செய்யப்போகிறார்கள்?

- பயப்படுகிறாயா? கழிவிரக்கம் கொள்கிறாயா?

அராபியர் ஆசிரியரை நோக்கினார்; அவருக்குப் புரியவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது.

தருய் ஒரு மடக்குக் கட்டிலை விரித்து," படுத்துக்கொள். இது உன் கட்டில்" என்றார்.

- பட்டாளத்தார் நாளை வருவாரா?

- தெரியாது.

- எங்களுடன் நீ வருகிறாயா?

- தெரியாது; ஏன்?

- எங்களுடன் வா.

நள்ளிரவு ஆகியும் தருய் தூங்கவில்லை. முன்னமே கட்டிலில் படுத்துவிட்டார். தயக்கமாய் இருந்தது: தாக்குதலுக்கு ஆளாகலாம் என உணர்ந்தார். பின்பு தோள்களைக் குலுக்கிக்கொண்டார். விளக்கை அணைத்தபோது இருள் உடனடியாய் இறுகினாற்போல் தோன்றிற்று.

கொஞ்ச நேரத்துக்குப் பின் அராபியர் லேசாய் அசைந்தபோது ஆசிரியர் விழித்துத்தான் இருந்தார் . கைதியின் இரண்டாம் அசைவு கண்டு எச்சரிக்கை கொண்டார். அவர் மெதுவாய் எழுந்து சிறிதுஞ் சந்தடி செய்யாமல் கதவை நோக்கி நடந்து தாழ்ப்பாளை ஓசையின்றி நீக்கித் திறந்து வெளியேறினார்.

"நழுவுகிறான், சங்கடம் தீர்ந்தது" என்று தருய் நினைத்தார். சிறிது நேரத்தில் அராபியர் உள்ளே வந்து கவனமாய்க் கதவைச் சாத்திவிட்டு ஓசையின்றிப் படுத்துக்கொண்டார். அப்போது தருய் மறுபக்கம் திரும்பி உறங்கினார்.

பின்பும் ஒரு தடவை ஆழ்ந்த தூக்கத்தினிடையே பள்ளியைச் சுற்றித் திருட்டுத்தனமான காலடி ஒலிகள் கேட்டதாய்த் தோன்றிற்று. "கனவு, கனவு" எனச் சொல்லிக்கொண்டே தூங்கினார்.

விழித்தபோது வானம் தெளிந்திருந்தது. இருவரும் ரொட்டி தின்று காப்பி பருகினர்.

ஆசிரியர் வெளியில் போனார். நீல வானில் சூரியன் ஏறியிருந்தான். அராபியரின் முட்டாள்தனமான குற்றம் அவருக்கு வெறுப்பூட்டியது; ஆனால் அவரை ஒப்படைப்பது தம் கெளரவத்துக்குப் பாதகம். அராபியரைத் தம்மிடம் அனுப்பிய தம்மவரையும் கொல்லத் துணிந்த ஆனால் தப்பியோட அறியா இந்த ஆளையும் ஒரே சமயத்தில் சபித்தார். பள்ளியுள் நுழைந்தார். அறைக்குள் சென்று ரஸ்க் ரொட்டி, பேரீச்சை, சீனி ஆகியவற்றை ஒரு பார்சலாக்கினார். இருவரும் வெளியேறும் முன்பு, ஆசிரியர் வகுப்பறையில் மேசைக்கெதிரில் ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு வாயிலைத் தாண்டிக் கதவைப் பூட்டினார்.

"இந்தப் பக்கமாய்" என்று சொல்லிக் கிழக்கு நோக்கி நடந்தார், கைதி பின்தொடர. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறிது இளைப்பாறி மேலும் ஒரு மணி நேரம் நடந்தனர். தருய் பார்சலை அராபியரிடம் அளித்தார்: "எடுத்துக்கொள்; பேரீச்சை, ரொட்டி இருக்கிறது; இரண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கலாம். இதோ ஆயிரம் பிரானும்" அராபியர் பெற்றுக்கொண்டார்.

கிழக்குத் திக்கைக் காட்டி ஆசிரியர் கூறினார்: "இதுதான் தைங்கித்துக்குப் போகிற பாதை. இரண்டு மணி நேரம் நடக்கவேண்டியிருக்கும். அங்கே அரசும் காவல்துறையும் உனக்காகக் காத்திருப்பார்கள்."

அவரைத் தெற்கு நோக்கித் திருப்பி, "அதோ அது பீடபூமியைக் கடக்கும் அடிச்சுவடு. ஒரு நாள் நடந்தபின் நாடோடிகளைக் காண்பாய்; அவர்கள் உன்னை வரவேற்று அவர்களின் சட்டப்படி உனக்குப் புகலிடம் அளிப்பார்கள்" என்றார்.

அராபியர் தருய் பக்கம் திரும்பினார் முகத்தில் ஒருவித பீதி படர்ந்தது . " நான் சொல்வதைக் கேள் " என்றார் .

தருய் தலையை ஆட்டி, " வேண்டாம், ஒன்றுஞ் சொல்லாதே . இப்போது உன்னைவிட்டு நான் போகிறேன்" எனக் கூறிவிட்டுப் பள்ளியை நோக்கி இரண்டு பெரிய அடி வைத்து அசையாமல் நின்றிருந்த அராபியரைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டுப் புறப்பட்டார். நீண்ட தொலைவுக்குப் பின்தான் திரும்பிப் பார்த்தார்.குன்றின்மீது யாருமில்லை; தருய் தயங்கினார்; திரும்பி வந்தார். சிறைக்குப் போகுஞ் சாலையில் மெதுவாய் நடந்துகொண்டிருந்த அராபியரைக் கனத்த இதயத்துடன் கண்டார்.

பிற்பாடு பள்ளிச் சன்னலின் எதிரே நின்றபடி வானின் உச்சியிலிருந்து பீடபூமியின் முழுப் பரப்பிலும் வீழ்ந்துகொண்டிருந்த வெளிச்சத்தை மேலோட்டமாய்ப் பார்த்தார். அவருக்குப் பின்புறம் கரும்பலகையில் , பிரஞ்சு ஆறுகளின் வளைவுகளுக்கு இடையே, திறமை குறைந்த கையொன்றால் எழுதப்பெற்றிருந்தது ஒரு சுண்ணக்கட்டி வாசகம்:

"எங்கள் சகோதரனை நீ ஒப்படைத்துவிட்டாய்; விலை கொடுப்பாய்"

அதைச் சற்று முன்தான் தருய் வாசித்திருந்தார்.