Sunday 7 June 2015

ரோமானியரின் இன்னொரு கொடை

       


 இப்போதைய இராக்கில் மிகப் பழங் காலத்தில் வாழ்ந்த சுமேரியர்களின் மன்னன் அம்முராபி (Hammurabi) -- பொ.யு.மு. 21 ஆம் நூற்றாண்டு -- உலகில் முதன்முதலாய்ச் சட்டங்கள் இயற்றியவன்; 282 ஷரத்து கொண்ட அவை எவ்வாறு அமல்படுத்தப்பட்டனவோ,தெரியாது; அரசனே நீதிபதியாய் இருந்திருப்பான்.

  அடுத்ததாக, சட்டம் பிறப்பித்தவர்கள் யூதர்கள்; அவர்களின் சட்டங்கள் விவிலியம் லேவியராகமம் அதிகாரம் 19, 20 இல் எழுதப்பட்டுள்ளன; இவற்றின் காலம் பொ.யு.மு. 13 ஆம் நூற்றாண்டு; இங்கும் வேந்தனே நீதிபதி. அரசன் சாலமன் சிறந்த முறையில் நீதி வழங்கினதாய் அறிகிறோம். இருந்தாலும் விசாரணை, சாட்சிகள் முதலியவை குறித்துத் தகவல் கிடைப்பதால் யூதரின் நடைமுறை சுமேரியருடையதைக் காட்டிலும் மேம்பட்டது எனத் தெரிகிறது.

 இக்காலத்தில் நீதித் துறை என ஒன்று, உலகின் எல்லா ஜனநாயக நாடுகளிலும் இயங்குகிறது; எழுதப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை, விசாரணை, வாதப் பிரதிவாதம் முடிந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த முன்னேற்ற நடைமுறையானது பாருக்கு எழுத்தறிவித்த ரோமானியரின் இரண்டாம் கொடை.

 ரோமானியரின் ஆட்சியில், மேலவை (செனேட்) என்ற சபை, சட்டங்களை உருவாக்கிற்று; சட்டம் பயின்றவர்கள் வழக்குரைஞர் ஆயினர். ஆரம்பத்தில் எழுத்து வடிவம் பெறாதிருந்த சட்டங்கள் யாவும், பொ.யு.மு. 451 இல், பன்னிரண்டு வெண்கல ஏடுகளில் பொறிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன; அவை பல நூற்றாண்டுக் காலம் அமலில் இருந்தன. சிவில் சட்டம்,குற்றவியல் (க்ரிமினல்) சட்டம் எனப் பின்னர் பிரித்தார்கள்.

  பொ.யு.மு. 2 ஆம் நூற்றாண்டில், குற்றவியல் மன்றங்கள் தனியே அமைந்தன. நாட்டுக்கு எதிரான துரோகம், அதிகார முறைகேடு, பொதுப் பணம் கையாடல், கள்ள நாணயத் தயாரிப்பு, ஆவண மோசடி முதலியவற்றைக் க்ரிமினல் குற்றங்களாய்க் கொண்டு அவற்றுக்குத் தண்டனையாய், சவுக்கடி, நாடு கடத்தல், கைகால் வெட்டல், கொலைத் தண்டனை பெற்றவர்களை சிலுவையில் அறைதல் அல்லது சிங்கத்துக்கு இரையாக்கல் ஆகியவை விதிக்கப்பட்டன.

 கொலைத் தண்டனை அல்லது நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டோர் மேல் முறையீடு செய்யலாம்.

 நீதிபதிகளை மேலவை நியமித்தது; இவர்களுக்கு முக்கிய வழக்குகளில் உதவுவதற்கு  ஜூரிகள் சீட்டுக் குலுக்கல் முறையில் தேர்வானார்கள். சிறைக் கண்காணிப்புப் பணியைப் பட்டாளத்தாரிடம் ஒப்படைத்தனர்.

   பொ.யு. முதல் நூற்றாண்டில் முக்கிய சிவில் சட்டங்கள் அடங்கிய நூலொன்று வெளிவந்தது; அடுத்து விவரமான நூல்கள் தோன்றின. தேவைக்குத் தக்கவாறு புதுச் சட்டங்கள் பிறந்தன; பழையன நீங்கின அல்லது திருந்தின.

 சக்கரவர்த்தி ஜஸ்டினியன் (ஆறாம் நூ.) பதினாறு வழக்குரைஞர் கொண்ட குழுவொன்றை அமைத்துச் சட்டங்களைச் சீராக்கப் பணித்தார்; அது 11 ஆண்டு உழைத்துச் சுமார் 30 லட்சம் வரிகளில் விரிந்திருந்த சட்டங்களை ஒன்றரை லட்சமாய்த் தொகுத்தது. 'ரோமானிய சட்டத் தொகுப்பு' ( Digest Of Roman Law) என்கிற அது, உலகக் குடியரசு நாடுகள் யாவற்றுக்கும் நீதித் துறைக்கான வழிகாட்டி.

   ரோமானிய சட்டங்களுக்கு முக்கிய அடிப்படை இரண்டு:

   1 -- சட்டத்தின்முன் யாவரும் சமம்.

   2 -- குற்றவாளி தப்பிக்கலாம், நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.

  இன்றைக்கும் இந்த அடிப்படை நீடிக்கிறது.

 1100 இலிருந்து பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் சட்டங்களைத் திருத்தியும் விரிவாக்கியும் மேம்படுத்தினர். அவை தொடக்கத்தில் ஐரோப்பா முழுதிலும் பின்பு அமெரிக்காவிலும் படிப்படியாய் அமலுக்கு வந்தன.

   ஆங்கிலேயர், பிரஞ்சியர் முதலானோர் ரோமானிய சட்டங்களைத் தத்தம் மொழியில் பெயர்த்தபோது, பற்பல லத்தீன் சொற்களையும் சொற்றொடர்களையும் மாற்றாமல் அப்படியப்படியே சேர்த்துக்கொண்டார்கள்.

    சிலவற்றின் பொருள்:

   -- அலிபி (alibi) - குற்றம் நிகழ்ந்த இடத்தில் தான் இல்லை என்பதற்கான சான்று.

   -- ஹேபியஸ் கார்ப்பஸ் (habeas corpus) - ஆள் கொணர் மனு.

   -- இன் கமேரா (in camera) - நீதி மன்றத்தில் அல்லாமல் தனியிடத்தில்.

   -- மலா ஃபிடே (mala fide) - கெட்ட நோக்கத்துடன்.

   -- போஸ்ட் மார்ட்டேம் (post mortem) - பிரேதப் பரிசோதனை.

   -- சப் ஜ்யூடிசி (sub judice) - கேஸ் விசாரணையில் இருக்கிறது.

   -- அல்ட்ரா வைரேஸ் (ultra vires) - உரிமை வரம்புக்கு அப்பாற்பட்ட.

     (பட்டியல் நீளமானது:  ad hoc, amicus curiae, bona fide, cui bono, de facto, de jure, interim, mutatis mutandi, persona non grata, prima facie, referundum, sine die, sine qua non, suo moto, veto)

     மரண வாக்குமூலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணால் கண்ட சாட்சி இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது சாவுப் படுக்கையில் வாக்குமூலமாகச் சொல்கிற எல்லாம் உண்மை என முழுமையாக ஏற்று அதை வழக்குக்கு முக்கிய ஆவணமாகக் கொள்வர். சாகப்போகிறவர் பொய் பேசமாட்டாரா? மாட்டாராம். ரோமானிய சட்ட வாக்கியம் கூறுகிறது:

   Nemo moriturus praesumitur mentire (யாரும் தமது உதட்டில் பொய்யோடு கடவுளைச் சந்திக்கமாட்டார்).

    இறுதியில் ஒரு லத்தீன் துணுக்கு:

  பொதுப்பணத்தைச் சுருட்டிய ஓரதிகாரி குற்றவாளிக் கூண்டில் நிற்கையில், அரசு வழக்குரைஞர் அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனத் தீவிரமாய் வாதாடினார். அவரது பெயர் கத்துலுஸ். (இதற்கு நாய்க்குட்டி என்றும் அர்த்தமுண்டு)

    ஒரு கட்டத்தில் எரிச்சலுற்ற அதிகாரி அவரை நோக்கி,

  "கத்துலுசே, ஏன் குரைக்கிறாய்?"

 என்று இரு பொருள்பட வினவிய  அடுத்த கணம் அவர் பதில் இறுத்தார்:

   "ஏனென்றால் திருடனைக் கண்முன் காண்கிறேன்" 

 (Catulle, quare latras?
 Quod prae me furem video).


               +++++++++++++++++++++++++

14 comments:

  1. காலம் காலமாக பலநாடுகளில் தோன்றி, மற்ற பல நாடுகளுக்கும் பரவியுள்ள, சட்டம் நீதி பற்றிய மிக அழகான விரிவான அலசல் பதிவினை அற்புதமாக ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவைகளுடன் கொடுத்துள்ளது, படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    // ஒரு கட்டத்தில் எரிச்சலுற்ற அதிகாரி அவரை நோக்கி,

    "கத்துலுசே, ஏன் குரைக்கிறாய்?"

    என்று இரு பொருள்பட வினவிய அடுத்த கணம் அவர் பதில் இறுத்தார்:

    "ஏனென்றால் திருடனைக் கண்முன் காண்கிறேன்" //

    சூப்பர். மிகவும் ரஸித்தேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ரசித்து விரிவாய் விமர்சித்து மனந் திறந்து பாராட்டியும் வாழ்த்தியும் கருத்துரைத்த உங்களுக்கு என் அகம் நிறைந்த நன்றி . எனக்கு அதிக ஊக்கம் தந்திருக்கிறீர்கள் .

      Delete
  2. //மரண வாக்குமூலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணால் கண்ட சாட்சி இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது சாவுப் படுக்கையில் வாக்குமூலமாகச் சொல்கிற எல்லாம் உண்மை என முழுமையாக ஏற்று அதை வழக்குக்கு முக்கிய ஆவணமாகக் கொள்வர்.......

    சாகப்போகிறவர் பொய் பேசமாட்டாரா?//

    இது மிகவும் சிந்திக்க வைக்கும் கேள்வியாகத்தான் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மரணத்தின்பின் கடவுளின் முன் நியாயத் தீர்ப்புக்காக மனிதன் நிற்கவேண்டியிருக்கும் என்று எல்லா மதங்களும் சொல்வதை முழுமையாய் நம்பிய காலம் பழங்காலம்.

      Delete
  3. அறியாச் செய்திகள் பல அறிந்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி .

      Delete
  4. Replies
    1. ரசித்திருக்கிறீர்கள் : மகிழ்ச்சி , மிக்க நன்றி .

      Delete
  5. ரோமானியரின் இன்னொரு கொடையான சட்டங்கள் பற்றியறிந்தேன். சாகப்போகிறவர் பொய் பேசமாட்டார் என்ற கருத்து யோசிக்கவைக்கிறது. பெரும்பாலானவர்கள் சாகப்போகிறோம் என்று தெரியும் போது உண்மையைப் பேசிவிட்டுத்தான் போவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும் என நினைக்கிறேன். அதற்கு மேல் பொய் பேசி ஆகப்பொவதென்ன? பொய்யினால் விளையக்கூடிய பலனை அனுபவிக்க அவர்கள் இருக்கமாட்டார்கள் அல்லவா? கத்துலுசு (நாய்க்குட்டி) குரைக்கிறது என்று லத்தீன் துணுக்கு ரசித்துச் சிரிக்க வைத்தது. அறியாச் செய்திகள். மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அந்த நம்பிக்கைதான் . அந்தத் துணுக்கு என் லத்தீன் ஆசிரியர் சிமோனேல் எங்களுக்குச் சொன்னது . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete
  6. கி.பி கிமு கேட்டதுண்டு. அதென்ன பொ யு மு.? பல செய்திகளைச் சொல்லிப் போகும் பதிவு ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பின்னூட்ட்ம் இட்டதற்கு மிக்க நன்றி . கிறிஸ்துவுக்கு முன் , பின் என்பது சமயச் சார்புடையது ஆதலால் அதைக் கைவிட்டு ஆங்கிலத்தில் Before Common Era ( BCE ) எனவும் Common Era ( CE ) எனவும் எழுதுகிறார்கள் . அதைப் பொது யுகத்துக்கு முன் ( பொ.யு.மு .) என்றும் பொது யுகம் ( பொ. யு ) என்றும் தமிழில் சொல்கிறோம் .

      Delete
  7. ரோமானிய சட்டங்களின் அடிப்படை இரண்டும் இன்றும் தொடர்வது சிறப்பு. சட்டத்துறையில் பயன்படுத்தப்படும் லத்தீன் சொற்கள் பற்றியும் அவற்றுள் சிலவற்றின் பொருளும் அறியத் தந்தமைக்கு நன்றி. மரணவாக்கு மூலம் சிந்திக்கவும் துணுக்கு ரசிக்கவும் வைத்தது. அறிந்திராத தகவல்களின் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. லத்தீன் சொற்கள் பற்றித் தமிழில் அறிய வாய்ப்பில்லை ; அதனால் சில சொன்னேன் . ரசித்துப் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete