Tuesday 19 April 2016

பத்மாவதி சரித்திரம்


நூல்களிலிருந்து - 6  

தமிழர்கள் காதல், வீரம், அறம், பக்தி முதலிய எப்பொருளாயினும் செய்யுளிலேயே எழுதினர். பிற மொழி இலக்கியங்கள் (லத்தீன், கிரேக்கம், வடமொழி... ) உரைநடையிலும் பிறந்திருக்கின்றன. பாரதம், இராமாயணம், பெருங்கதை, நைடதம் முதலான சமற்கிருத ஆக்கங்களைத் தழுவி செய்யுளில் நூல்கள் உருவாக்கிய நம் முன்னோர் ஏன் முத்ரா ராட்சசம், பஞ்ச  தந்த்ரக் கதைகள் என்னும் உரைநடை இலக்கியங்களை நம் மொழிக்குக்  கொண்டுவரவில்லை?

 பத்தாம் நூற்றாண்டிலிருந்து உரைகள் எழுதப்பட்டன; அவை பிறரது கருத்துகளுக்கு விளக்கங்களே ஒழிய சொந்தப் படைப்புகள் ஆகா

  ஆங்கிலேயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கு வந்து உரைநடையில் எழுதி வழி காட்ட,  நாம் பின்பற்றினோம். சிறுகதை, புதினம் என்னும் புது வகை அணிகள் தமிழுக்குக் கிடைத்தன

  தமிழின் முதல் புதினங்களுள் ஒன்றான 'பத்மாவதி சரித்திரம்' சென்னைக்  கிறித்தவக் கல்லூரிப் பட்டதாரியான . மாதவையா (1872 - 1925) -வால் இயற்றப்பட்டது; ஆண்டு தெரியவில்லை; அதன் இரண்டாம் பாகம் ஐந்தாம்  அதிகாரத்தின் முன்பகுதியைப் பகிர்கிறேன்.





        குற்றாலக் காட்சி

  இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களின் மேற்கிளைகள் ஒன்றோடொன்று பின்னி முறுக்குண்டு எப்போதும் குளிர்ந்த நிழலைக் கொடுக்கிற இப்பெரும் பாட்டையின் பக்கங்களில் விசாலமான தோட்டங்களும் பாறைகளுக்குக் கிரீடங்கள் போல் விளங்கும் பங்களாக்களும் இருக்கின்றனஆனந்த நடராஜ  மூர்த்தியைக் கண்ணாரக் கண்டு களித்தவுடன்அப்பரமானந்த வெள்ளத்தில் ஒரு சிறு துளி தம்முள்ளும் புகஅகமகிழ்ந்து, முக மலர்ந்து, உரை நெகிழ்ந்துதள்ளுண்டு தடுமாறி, அம்மூர்த்தியின் திவ்ய குணங்களைச் செந்தமிழ் மணக்கும் பாக்களால் பாடித் துதித்துக்கொண்டு சந்நிதியை விட்டு அரிதில் நீங்கி வெளிவரும் மெய்யடியார்களைப் போலபூங்காவனங்களின் பரிமளங்களைச் சுமந்து மெதுவாக வரும் மந்தமாருதமானது, சரீரத்தின் களைப்பை நீக்கிப் பலத்தை அளித்துமனத்துக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றதுபட்டதோ படவில்லையோ என்று சந்தேகிக்கும்படி, காற்று அவ்வளவு மெதுவாக இருந்தும், மரங்களின் கிளைகளின் மேலே ஆடியசைந்து சப்திப்பதைக் கேட்டு மேல்நோக்கினால், குரங்குகள் மந்தைமந்தையாய்த் தாவித்தாவி ஓடுவதைக் காண்கிறோம்; சூரிய கிரணங்கள் நம்மேல் படாவிட்டாலும், வெயிலைப் பார்க்குங்கால்சமதரிசியான வெய்யவனும் தனக்கு இயல்பான கொடும் வெப்பத்தைக்  கட்டி வைத்துவிட்டு இடத்துக்கேற்றபடி சாந்தமாய்ப் பிரகாசிப்பதாய்த் தெரிய வருகிறது. ஒப்பற்ற போக பூமியாகச் சொல்லப்படும் சுவர்க்கத்தின் கால ஸ்திதி இப்படித்தான் இருக்கும்போலும்! பல கோடி வண்டுகள் ஒருமித்து  ரீங்காரம் பண்ணுவது போன்ற ஓர் இனிமையான ஓசை இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கிறது

  ஆகா! இதென்ன அற்புதம்! வழி தப்பிச் சுவர்க்கத்தில் தேவ ஸ்த்ரீகளும் தேவர்களும் கிரீடித்து நீராடி விளையாடும் ஆகாயக் கங்கைச் சாரலை அடைந்துவிட்டோமோ? கண்ணுக்கெட்டா மலைச் சார்பினின்று இழிந்து, அதோ, கடன்பட்டார் நெஞ்சம் போலத் தத்தளித்துக்கொண்டிருக்கும் பொங்குமாங்கடல் என்னும் தடாகத்துள் கோவென்றலறி வீழ்ந்து, பின்பு கிளம்பிச் செங்குத்தான இக்குன்றின்மேல் பல கவறுகளாகப் பாய்ந்துகீழுள்ள தடாகத்தில் வீழும் இவ்வருவியைக் கண்டவுடன், தன்னையறியாத சந்தோஷம் மனத்திற் பொங்குகிறது. இக்குன்றின் மார்பும் அடிவாரமும் நவரத்நங்களால் இழைக்கப்பட்டிருக்கின்றனவோ அல்லது வானவிற்கள்தாம் இவ்வாறு பிரகாசிக்கின்றனவோ, தெரியவில்லை. இவ்வழகிய காட்சி வார்த்தைகளால் வர்ணிக்கக்கூடியதல்ல

      ====================================
  (படம் உதவி - இணையம்)

8 comments:

  1. அழகானதோர் காட்சியினை தேடிப்பிடித்து அற்புதமாக எடுத்துப் பதிவிட்டுள்ளீர்கள்.

    படிக்கும்போதே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நானும் சுவைத்து வாசித்துத்தான் பதிவிட்டேன் .

      Delete
  2. Replies
    1. வருக வருக , பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  3. அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஒன்றிரண்டு பத்தியிலேயே எவ்வளவு உவமைகள்... பாறைக்கு கிரீடம் வைத்தாற்போன்ற பங்களாக்கள் ரசனையான வரிகள்.. பூங்காவனங்களின் வாசனைகளைச் சுமந்து மெதுவாக வரும் மந்தமாருதத்துக்கு ஆசிரியர் காட்டும் அடியார் உவமையும் அதற்கான வர்ணனையும் அபாரம். தமிழின் முதல் புதினங்களுள் ஒன்றான பத்மாவதி சரித்திரம் என்னும் இந்த நூலை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் . ஆற்றொழுக்கான நடை . புதிய உவமைகள் . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete
  4. 'அகமகிழ்ந்து, முக மலர்ந்து, உரை நெகிழ்ந்து, தள்ளுண்டு தடுமாறி' - எவ்வளவு அழகான சொற் பிரயோகம்! முதல் புதினத்திலேயே உரைநடை அனைவருக்கும் புரியுமாறு இருப்பது வியப்பே! அருமையான குற்றால இயற்கைகாட்சியின் வர்ணனையை நாங்களும் சுவைக்குமாறு பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பிரமாதமான உரைநடை யென வாசிப்பவர் யாவரும் கூறுவர் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete